Wednesday, September 1, 2010

இனத்தின் மரணம்

எஞ்சியிருப்பதும்
எப்போதும் எம்முடன் இருப்பதும் துரோகம்

எமது அடயாளம் துரோகம்
எமது தோல்விகளை நாமே தீர்மானித்தோம்
இத்தால் வரலாற்றில் நாம் எப்போதும் அடிமைகள்
இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

நாம் வணங்கும் கடவுள் ஒரு துரோகி
ஏனெனில் அங்குதான் ஜனநாயக மறுப்பு பிறக்கின்றது
மனிதாபிமானத்திற்கு குழிதோண்டுதல் பழக்கப்படுகின்றது
கோயில் கட்டியவனும்
படையல் உணவை உற்பத்திசெய்தவனும்
வேலை முடிந்ததும் நிராகரிக்கப்படுகின்றனர்

கடவுள் எம்மைப் படைக்கவில்லை
வஞ்சகத்தை நிலைநாட்ட
நாமே கடவுளைப்படைத்தோம்

மெய்மறக்கும் பக்திப் பரவசங்களின் பின்னாலும்
பவ்வியமான உதடுகள் உச்சரிக்கும் கீர்தனைகளுக்குப் பின்னாலும்
உயிர்கள் வதைபடுகின்றது இதயங்கள் பிழிபடுகின்றது

வயல்களில் மானுடர் வதைபட திண்ணைகளில் மொழி வளர்ந்தது
களைப்பிலும் வேதனையிலும் மானுடர் முனக
தேவார திருவாசகங்கள் செழித்தது

தேவடியாள்களை ஆட வற்புறுத்தி முறுக்கேற்றினார்கள்
கோயில் சுற்றாடல்களில்
குறிகளின் பசிக்கு கடவுள் பெயரால் யோனிகள் பணிவிடைசெய்தது

ஆடலையும் பாடலையும் திருடிக்கொண்டு
அதுவே எம் கலை என்றார்கள்

பறையடித்தவனை துரத்தி இசையை புடுங்கிக்கொண்டார்கள்
பட்டுவேட்டிகட்டி தவிலடித்து தம்பட்டமடித்தார்கள்

ஆகரத்தில் நேர்மையில்லை
உணவை போசித்து
உற்பத்தி செய்தவனையே தீண்ட மறுக்கும் சமுதாயம்

வாழ்வே துரோகம்
வஞ்சகமே பண்பு
களவே கலை
ஜனநாயக விரோதமே சமூகம்
தேசியம் ஒரு பாவம்
மர்க்சியத்தால் அல்ல
எந்த இசத்தாலும் கழுவ முடியாத பாவம்
ஒருவனை ஒருவன் சிலுவையில்
அறைந்துகொள்வதுதான் முடிவு
பாவத்தின் சம்பளம் இனத்தின் மரணம்.